பெண்களுக்கு உதவித்தொகை வழங்குவது போல், ஆண்களுக்கு வாரத்திற்கு இரண்டு மது பாட்டில்கள் வழங்க வேண்டும் என்ற கர்நாடாக எம்எல்ஏவின் கோரிக்கை சட்டசபையில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் மிதான விவாதத்தில், கடந்த செவ்வாயன்று (21.3.2025) மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ எம்.டி கிருஷ்ணப்பா முன்வைத்த ஒரு கோரிக்கைதான் சூடான விவாதத்தை கிளப்பியுள்ளது.
அவர் பேசுகையில்,
" நீங்கள் பெண்களுக்கு மாதம் ரூ.2,000, இலவச மின்சாரம் மற்றும் இலவச பேருந்து பயணம் ஆகியவற்றை வழங்குகிறீர்கள். அது எப்படியிருந்தாலும் எங்கள் பணம். எனவே, குடிப்பவர்களுக்கு, வாரத்திற்கு இரண்டு பாட்டில்கள் இலவசமாகக் கொடுங்கள்.
அவர்கள் குடிக்கட்டும். ஆண்களுக்கு எப்படி மாதத்திற்கு பணம் கொடுக்க முடியும்? அதற்கு பதிலாக, வாரத்திற்கு இரண்டு பாட்டில்கள் கொடுங்கள். அதில் என்ன தவறு? அரசாங்கம் இதை சங்கங்கள் மூலம் வழங்க முடியும்," என்று தெரிவித்துள்ளார்.
இதனால், சட்டசபையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது குறுக்கிட்ட அமைச்சர் கேசி ஜார்ஜ், ’நீங்கள் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த பின்னர் இப்படி இலவசமாக மதுபாட்டில்களைக் கொடுக்கலாம். எங்களைப் பொறுத்தவரை குடிப் பழக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.’ என்றார்.
இதனையடுத்து பேசிய, சபாநாயகர் யுடி காதர், “மது பாட்டில்களை கொடுக்காமலே நாங்கள் ஏற்கெனவே போராடி வருகிறோம். இதில் அவர்களுக்கு இலவசமாக மதுபானம் கொடுத்தால் என்ன நடக்கும்” என்று எம்.எல்.ஏவின் கருத்தை எதிர்த்தார்.
உடனே பேசிய எம்.எல்.ஏ எம்.டி கிருஷ்ணப்பா, “ பல சட்டமன்ற உறுப்பினர்களே மது அருந்துகின்றனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் குடிப்பழக்கம் குறித்து கருத்தை தெரிவிக்கிறேன்” என்று கூறினார். இவரது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.