Ramalinga Reddy எக்ஸ் தளம்
இந்தியா

2 நாள்கூட ஆகலை.. பதவியிலிருந்து விலகிய அமைச்சர்.. கர்நாடக முதல்வருக்கு பின்னடைவு!

இதற்கு உதாரணமாய் அவரது ஆதரவு பெற்றவர்களே அதிகளவில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றிருந்தனர்.

Prakash J

கர்நாடகாவில் அமைச்சராகப் பதவியேற்று இரண்டு நாட்கள் கடந்த நிலையில், ராமலிங்க ரெட்டி அதிலிருந்து பதவி விலகியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

முதல்வர் யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 13 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். முதலமைச்சர் பதவியில் இருந்து சித்தராமையா விலகிய பின்னரும்கூட, கர்நாடக அரசியலில் அவர் கணிசமான செல்வாக்கைத் தொடர்ந்து செலுத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இதற்கு உதாரணமாய் அவரது ஆதரவு பெற்றவர்களே அதிகளவில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றிருந்தனர்.

மேலும், முதலமைச்சர் பதவியிலிருந்து சித்தராமையா விலகியபிறகும்கூட, அவரது பங்களாவைக் காலி செய்யவில்லை. இதையடுத்து, கர்நாடக அரசியலில் அவரது அதிகாரமே கோலோச்சப்படுவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அமைச்சராகப் பதவியேற்று இரண்டு நாட்கள் கடந்த நிலையில், ராமலிங்க ரெட்டி அதிலிருந்து பதவி விலகியிருப்பது பேசுபொருளாகி உள்ளது. அவருக்கு நடுத்தர நீர்ப்பாசனத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர் பெங்களூரு மேம்பாட்டுத் துறையைக் கேட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில்தான் துறை பிடிக்காததால் அதிலிருந்து ராமலிங்க ரெட்டி விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமலிங்க ரெட்டி, “பெங்களூரு இலாகா தனக்கு வழங்கப்படும் என்று இரண்டு முறை உறுதியளிக்கப்பட்டது. அதில் தனக்கு ஏமாற்றம் உள்ளது. அதனால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளேன். தான் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வேன். முதல்வர் சிவகுமார் மீதோ அல்லது முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மீதோ தனக்கு எந்த வருத்தமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

CM DK Shivakumar

இவ்விவகாரம் குறித்து முதல்வர் டி.கே.சிவகுமார், “நான் அவரிடம் இதுகுறித்துப் பேசி சரிசெய்துவிடுவேன். கவலைப்பட ஒன்றுமில்லை. அவர் ஒரு சிறந்த நண்பர். அமைச்சரவையிலேயே நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள். நாங்கள் இந்தப் பிரச்னையைச் சரிசெய்துவிடுவோம். ராமலிங்க ரெட்டி எனது சக ஊழியர். அவர் ஒரு மூத்த தலைவர். கிராமங்களுக்குச் சென்று விரிவாகப் பணிகளை மேற்கொள்வது தன்னால் இயலாமல் போகலாம் என்பதே அவரது கவலை. அதனால், தனக்கு வேறு ஏதேனும் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் விரும்புகிறார். அதுதான் அவருடைய விருப்பம்”என்றார். எனினும், இவ்விவகாரத்தால் கர்நாட முதல்வர் டி.கே.சிவகுமார் தொடக்கத்திலேயே பின்னடைவைச் சந்தித்திருப்பதாகக் கூறப்படுகிறது.