சுமலதா
சுமலதா ட்விட்டர்
இந்தியா

”மாண்டியாவின் வளர்ச்சியே முக்கியம்” - பாஜகவில் இணைந்தார் சுயேட்சை எம்.பி சுமலதா! யார் இவர்?

Prakash J

மாண்டியாவில் களமிறக்கப்பட்ட முன்னாள் முதல்வர் குமாரசாமி

கர்நாடகாவில் உள்ள மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாகத் (ஏப்.26 மற்றும் மே 7) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று அரியாசனத்தில் அமர்ந்துள்ளது. தற்போது நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் அதை வீழ்த்தும்வண்ணம் பாஜகவும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. அந்த வகையில், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு சிக்கபள்ளாப்பூர், மாண்டியா, ஹாசன் என 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதில் மாண்டியா தொகுதியில் தேவகவுடாவின் மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி களமிறங்குகிறார். கடந்த 2019 தேர்தலில் இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளரான சுமலதாவிடம் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமி தோல்வியடைந்தார். இதைத் தொடர்ந்து சுயேச்சை எம்பியான சுமலதா பாஜகவுக்கு ஆதரவு அளித்து வந்தார். இதனால் மீண்டும் அந்த தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேட்சையாகப் போட்டியிட ஆர்வம் காட்டியிருந்தார். ஆனால், அந்த தொகுதி கூட்டணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு ஒதுக்கப்பட்டது.

இதையும் படிக்க: RSS, சங்பரிவார், பாஜக நிர்வாகிகளுக்குச் சொந்தமான 62% சைனிக் பள்ளிகள்.. RTI மூலம் வெளியான தகவல்!

அதிருப்தி அடைந்த சுமலதா பாஜகவில் இணைந்தார்

இதனால், சுமலதா அதிருப்தி அடைந்தார். அதிருப்தி அடைந்த சுமலதாவிடம் கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திராவும், குமாரசாமியும் சந்தித்து ஆதரவு கோரினர். இதன்பின் தேர்தலில் (மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக) இருந்து விலகுவதாக அறிவித்த சுமலதா. தாம் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அப்போது பேசிய அவர், ”நான் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. காங்கிரஸில் எனக்கு மரியாதை இல்லை. எனவே விரைவில் பாஜகவில் இணைய முடிவெடுத்திருக்கிறேன். பாஜக எனக்கு மைசூரு, சிக்கப்பள்ளாப்பூர், பெங்களூரு வடக்கு ஆகிய தொகுதிகளை அளிக்க முன்வந்தது. ஆனால் என் கணவரின் சொந்த தொகுதியான மண்டியாவைவிட்டுச் செல்ல மனமில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், இன்று (ஏப்ரல் 5) பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பா, மாநில தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

இதுகுறித்து சுமலதா, "மண்டியா மாவட்டத்தின் விரிவான வளர்ச்சியே எனது அடிப்படை மந்திரம். மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்ற நம்பிக்கையில் பாஜகவில் இன்று இணைந்துள்ளேன்" கூறினார்.

இதையும் படிக்க: சாதிச் சான்றிதழ் வழக்கு: கருணாஸ் பட நடிகைக்கு சாதகமாக அமைந்த தீர்ப்பு.. உற்சாகத்தில் பாஜக வேட்பாளர்!

யார் இந்த நடிகை சுமலதா?

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ், மாண்டியா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றிருந்தார். இதில் ஒரு முறை மஜத சார்பிலும், 2 முறை காங்கிரஸ் சார்பிலும் அவர் எம்பியாக தேர்வானார். அவரது மறைவுக்குப் பிறகு மனைவி சுமலதா காங்கிரஸ் சார்பில் மாண்டியாவில் களமிறங்க விருப்பம் தெரிவித்தார்.

ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அவருக்கு சீட் வழங்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு 1.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து பாஜக மேலிடம் சுமலதாவிடம் தங்களது கட்சியில் இணையுமாறு வலியுறுத்தியது. ஆனால் அவர் பாஜகவில் சேராமல், தொடர்ந்து அக்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த நிலையில், இன்று அக்கட்சியில் ஐக்கியமாகி உள்ளார்.

இதையும் படிக்க: இணைக்கப்படாத பான்-ஆதார்: 9 ஆயிரம் பேருக்கு சம்பளமாக ரூ.1 மட்டுமே வரவு..அதிர்ச்சியில் மும்பைநகராட்சி!