இந்தியா

கர்நாடகா: இரவு ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற்றார் முதல்வர் எடியூரப்பா

Veeramani

மாநிலத்தில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கும் உத்தரவை வாபஸ் பெறுவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் வெளிவந்த, உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அச்சத்தினால் கர்நாடக அரசு நேற்று மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதாக அறிவித்தது. அதன்படி டிசம்பர் 23 முதல் ஜனவரி 2 வரை, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. பின்னர் சில மணி நேரம் கழித்து இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இருக்கும் என உத்தரவு திருத்தப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு நடவடிக்கை தேவையில்லை என்று எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கருத்து தெரிவித்தனர்.  அமைச்சர்கள், அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின்னர் கர்நாடக முதல்வர் எடியூரப்பா வெளியிட்ட அறிக்கையில் "இரவு ஊரடங்கு உத்தரவு தேவையில்லை என்ற பொதுமக்களின் கருத்தை, கருத்தில் கொண்டு இந்த முடிவு பரிசீலிக்கப்பட்டது. அமைச்சரவை சகாக்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் இரவு ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்