கர்நாடகாவில் 7-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் கர்நாடகாவில் 7-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான சுரேஷ் குமார், நடப்புக் கல்வியாண்டில் இருந்து 7-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்படும் என்றார். இதன் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், “ மாணவர்கள் சொல்லிக் கொடுப்பதை கற்றுக்கொண்டு தேர்ச்சி அடைகிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டியது கட்டாயம். 9-ஆம் வகுப்பு வரை தோல்வி இல்லை என்கின்றபோது கல்வியின் தரம் ஒருவேளை பாதிக்கப்படலாம்.” எனக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நியூஸ் மினிட் இணையதளத்திற்கு பேசிய கல்வித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், “ 7-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான கேள்வித்தாள்களை தயாரிக்கும் பொறுப்பை எஸ்எஸ்எல்சி மேற்கொள்ளும். மாவட்ட அளவில் விடைத்தாள்கள் திருத்தப்படும். ஒருவேளை இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் அடுத்த ஆண்டு நிச்சயம் அமல்படுத்தப்படும்” என்றார்.