இந்தியா

நாளை மதியத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள் - குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம்

webteam

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மதியத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் வஜூபாய் வாலா முதலமைச்சர் குமாரசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் அதிருப்தியால் ஆட்சி ஊசலாடிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் மஜத உட்பட இதுவரை 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதால், ஆட்சியை கைப்பற்ற பாஜகவினர் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த விவகாரம் நீதிமன்றம் சென்று, சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேசமயம் எம்.எல்.ஏக்கள் அவைக்கு வருவதும், வராததும் அவர்கள் விருப்பம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் இன்று கர்நாடக சட்டப்பேரவை கூடியது. முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியிருந்தார். அதன் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அது முடிந்ததும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. கர்நாடக ஆளுநரும் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்துமாறு சபாநாயகருக்கு அறிவுறுத்திருந்தார். ஆனால் அவை நாளை காலைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஆளுநர் வஜூபாய் வாலா கர்நாடக முதலமைச்சர் குமாராசமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நாளை மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.