செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநிலம் கலபுரகி சேடம் தாலுகா ஹபாலா - தெல்கூர் சாலையில், ஒரே சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிரெதிர் திசையில் வேகமாக வந்தன. இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேடம் போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள், ஹபாலா கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜன் (20), சித்து கிஷன் (25), தெல்கூர் கிராமத்தில் வசித்து வந்த பிரகாஷ் (19), சுரேஷ் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது.
ஹெல்மெட் அணியாமலும், அதிவேகமாகவும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நான்கு பேரும் இறந்து விட்டதாக போலீசார் கூறினர். இந்த சம்பவம் ஹபாலா, தெல்கூர் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.