எடியூரப்பா மீது போக்ஸோ வழக்கு
எடியூரப்பா மீது போக்ஸோ வழக்கு முகநூல்
இந்தியா

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... கர்நாடக முன்னாள் பாஜக முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்ஸோ வழக்கு!

ஜெனிட்டா ரோஸ்லின், ஜெ.நிவேதா

கர்நாடக மாநிலத்தின் மூத்த பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா (81 வயது), மூன்று முறை கர்நாடக முதல்வராக பதவி வகித்தவர். இவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரில், “கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி வழக்கொன்றில் உதவிக்கேட்டு எடியூரப்பாவை சந்தித்தேன். அப்போது என் மகளை தனியாக அழைத்துச் சென்ற எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பின் என் மகளிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். தொடர்ந்து ‘உனக்கு மேற்கொண்டு தேவையான உதவிகளை நான் செய்கிறேன். இங்கு நடந்த விஷயத்தினை வெளியே சொன்னால் நீதான் பிரச்னையை சந்திக்க நேரிடும்’ என்று எனது மகளை அவர் மிரட்டியும் உள்ளார். என் மகள் ஏற்கெனவே ஒரு பாலியல் கொடுமையில் பாதிக்கப்பட்டவர். தாத்தா என்றே என் மகள் எடியூரப்பாவை அழைத்தார். நான் என் அப்பாவை போல அவரை பார்த்தேன்” என கூறப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

சிறுமி குடும்பத்தினர் ஏற்கெனவே மோசடி (வர்த்தகம் தொடர்பான) வழக்கொன்று போலீஸில் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் சிறுமியின் தாய் பல கோடி மோசடி செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தங்கள் மீது தவறில்லை என்பதால், நடவடிக்கையை துரிதப்படுத்த சிறுமியும் அவரின் தாயும் எடியூரப்பாவை அனுகியதாகவும் அப்போதுதான் எடியூரப்பா சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த புகாரின்கீழ், போக்ஸோவில் எடியூரப்பா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. போக்சோ சட்டப்பிரிவு 8 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 352A ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், மேற்கொண்டு விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என சிறுமியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எடியூரப்பா,

“ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் அச்சிறுமியும் அவரது தாயும் உதவியொன்று கேட்டு என்னை சந்திக்க வந்தனர். அவர்கள் நிலையை அறிந்து சிட்டி கமிஷனர் தயனாந்தாவை ஃபோனில் அழைத்து பேசி உதவிசெய்யும்படி கோரினேன். ஆனால் இப்போது எனக்கே எதிராக பேசுகிறார்கள். அச்சிறுமிக்கு ஏதோ உடல்நலக்கோளாறு இருப்பதாக அறிந்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நானே அவர்களை அனுப்பிவைத்தேன். அவர்கள் மன உளைச்சலில் இருந்ததால் கொஞ்சம் பணம்கூட கொடுத்தேன். ஆனால் இப்போது இப்படி நடந்துள்ளது. என் மீதான எஃப்.ஐ.ஆர் பற்றி அறிந்துள்ளேன். விரைந்து அதன்மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். உதவிசெய்தால் இப்படித்தான் நமக்கு நடக்கும்!” என்றுள்ளார்.

போக்ஸோ சட்டம்

POCSO சட்டமனாது கடந்த 2012 ஆம் ஆண்டு மத்திய அரசால் 18 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர்கள் மீதான பாலியல் அத்துமீறலைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது.