உயிரிழந்த சிறுவர்கள்
உயிரிழந்த சிறுவர்கள்  file image
இந்தியா

'நீங்களும் வந்துவிடுங்கள்' பெற்ற பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தம்பதி விபரீத முடிவு-அதிர்ச்சி பின்னணி?

PT WEB

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம், அருகே உள்ள சீராவைச் சேர்ந்தவர் கரீப் சாப் [32]. இவரது மனைவி சுமய்யா [30]. இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஹஜினா[14], என்ற மகளும், முகமது ஷபீர், [10], ஷபீர் [8], என்ற இரண்டு மகன்களும் இருந்தனர்.

இந்தநிலையில், தம்பதி நேற்று இரவு தங்களுடைய 3 பிள்ளைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பின்னர் அவர்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட தம்பதி

இச்சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சோதனை செய்ததில் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றியுள்ளனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கரீப் சாப், மளேகோட்டேவில் உணவகம் நடத்தி வந்துள்ளார். இதற்காகப் பல இடங்களில் லட்சக்கணக்கில் கடன் வாங்கியதாகவும், அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கடிதம்

மேலும் இவர்கள் குடியிருக்கும் கீழ் வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் கடும் நெருக்கடி கொடுத்துள்ளதாகவும், இதனால் விரக்தியடைந்த தம்பதி, தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இறப்பதற்கு முன்பு கரீப் சாப் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராம மக்கள்

இச்சம்பவம் தொடர்பாகக் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், " ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மரணம் அடைந்தது குறித்து விசாரணை நடத்தப்படும். கரீப் சாப் கடிதத்தில் எழுதியிருந்த 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணியில், கந்து வட்டி விவகாரம் இருப்பதாகப் பலரும் கூறுகின்றனர். இதற்குக் கடிவாளம் போட நடவடிக்கை எடுக்கப்படும். வட்டித்தொழில் செய்பவர்கள் மீது, சட்ட ரீதியில் வழக்குப் பதியப்படும். விசாரணைக்குப் பிறகு கரீப் சாப் குடும்பத்தினர் தற்கொலைக்கு, என்ன காரணம் என்பது தெளிவாகும்" என்றார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.