அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும், அவர்களைத் தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்தத் தேர்தலின்போது, காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் அறிக்கையில், வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகளைத் தெரிவித்திருந்தது.
தற்போது, காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து, இத்தகைய வாக்குறுதிகளை நிறைவேற்ற சித்தராமையா அமைச்சரவை முடிவு செய்தது.
அதன்படி, இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு பேசிய முதல்வர் சித்தராமையா, ”வரும் 11ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம். ஜூலை 1 முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும்” என கூறியுள்ளார்.