இந்தியா

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி

webteam

கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றதையடுத்து முதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார்.

கர்நாடக சட்டப்பேரவை 4 நாட்களாக நடந்த வாதத்திற்கு பின்னர் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகள் மட்டுமே பதிவாகின. எதிராக 105 வாக்குகள் பதிவாகின. இதனால் பெரும்பான்மையை இழந்த மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதனால் முதலமைச்சர் பதவியை இழக்கும் நிலையை குமாரசாமி அடைந்தார்.

இந்நிலையில் பாஜக ஆட்சி அமைப்போம் என எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார். அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஆளுநர் வஜுபாய் லாலாவை சந்தித்து அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார். அத்துடன் குமாரசாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.

இந்நிலையில் குமாரசாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். அதனை ஆளுநர் வஜுபாஜ் லாலா ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார். அல்லது எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார்.