செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொல்லேகல் தாலுகாவில் சிக்கிந்துவாடி அருகே கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், கார் சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில், காரில் பயணம் செய்தவர்கள் மண்டியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் கொல்லேகல் வழியாக மதேஸ்வர மலைக்குச் சென்றது தெரியவந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கொல்லேகல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.