இந்தியா

கல்லூரி படிப்புக்குத் தடையாக நின்ற திருமணம் - மணமகனைக் கத்தியால் குத்திய மணப்பெண்

rajakannan

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கர்நாடக மாநிலத்தில் பெட்டதாபட்னா பகுதியில், 31 வயதுடைய இளைஞர் கத்திக்குத்து காயத்துடன் சாலையில் கிடந்துள்ளார். காயமடைந்த அந்த இளைஞரை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர், போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வியக்கத்தக்க தகவல்கள் வெளிவந்தது.

கர்நாடக மாநிலம் பெட்டதபுரா நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பெட்டதாபட்னா பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். மார்ச் 13ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால், தான் படிப்பைத் தொடர வேண்டும் என்றும் திருமணத்தை தள்ளி வையுங்கள் என்றும் தனது பெற்றோரை அந்தப் பெண் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், பல்வேறு காரணங்களைக்கூறி அவரது பெற்றோர்கள் அந்தப் பெண்ணின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.

இதனையடுத்து, அந்தப்பெண் வித்தியாசமான முடிவு ஒன்றினை எடுத்துள்ளார். தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட அந்த இளைஞருக்கு போன் செய்து நேரில் சந்திக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். வேளாண் அலுவலகத்திற்கு அருகில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது, அந்த இளைஞரை அவர் கத்தியால் குத்தியுள்ளார். பெண்ணின் இந்தச் செயலை அவர் எதிர்பார்க்கவில்லை.

இதுகுறித்து காவல் அதிகாரி கூறுகையில், “அந்தப் பெண் தன்னுடைய படிப்பை தொடர விரும்புகிறார். அதற்காக, எங்களுடைய உதவியைக் கோரியுள்ளார். அவருடைய படிப்புக்கு உதவ சில தனியார் தொண்டு நிறுவனங்களை அணுகியுள்ளோம்” என்று தெரிவித்தார். பெண்ணின் விரும்பம் குறித்து தங்களது குடும்பத்திற்கு தெரியாது என்று அந்த இளைஞரின் உறவினர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய கல்லூரி படிப்பை தொடர்வதற்காக இப்படியொரு விபரீத முடிவை இளம்பெண் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.