வந்தேமாதரம் மசோதா Pt web
இந்தியா

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3ஆண்டு சிறை.. மக்களவையிலும் நிறைவேறியது மசோதா.. திமுக கடும் எதிர்ப்பு

மாநிலங்களவையைத் தொடர்ந்து கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையிலும் வந்தே மாதரம் மசோதா நிறைவேறியது.

Premkumar S

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் வகையிலான மசோதாவை கடந்த ஜூலை 24-ம் தேதி மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்ளவையில் தாக்கல் செய்தார்.

மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அரசு நிகழ்ச்சியில் தேசிய பாடலான வந்தே மாதரத்தை கட்டாயமாக பாட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த அறிவிப்பில் அரசு நிகழ்ச்சியில் முதலாவதாக வந்தே மாதரம் பாடலைத்தான் பாட வேண்டும் என்றும், அதன் பிறகே தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.

மோடி - விஜய்

எனினும், மத்திய அரசின் முடிவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. குறிப்பாக, பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் விஜயும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் எனவும் வந்தேமாதரம் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். எனினும், ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டு வருகிறது

வந்தேமாதரம் பாடலுக்கு எதிர்ப்பு ஏன்?

தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் என்பதும் மேலும், வந்தே மாதரம் பாடலின் அதிகாரப்பூர்வ முழுப் பதிப்பான 6 பத்திகளையும் முழுமையாகப் பாட வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் வந்தே மாதரத்தின் இறுதி பத்திகளில் இந்து கடவுள்கள் குறித்த பாடல்கள் இருந்ததால் இதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாக பாடப்பட வேண்டும் என்பது ஆளும் தவெக அரசு மற்றும் எதிர்க்கட்சியான திமுகவின் நிலைப்படாக இருந்து வருகிறது.

வந்தே மாதரம் 150

வந்தே மாதரம் மசோதா

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால், 3 ஆண்டு கடும் தண்டனை அளிக்கப்படும் வகையிலான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா நேற்றைய தினம் மாநிலங்களவையில் நிறைவேறிய நிலையில், இன்று மக்களவையில் கொண்டு வரப்பட்டது. அப்போது, இந்த மசோதாவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

குறிப்பாக இந்த மசோதா குறித்துப் பேசிய திமுக எம். பி. கனிமொழி, தேசபக்தியை ஒரு சட்டத்தின் மூலம் மக்கள் மீது கட்டாயப்படுத்தக் கூடாது என்று வாதிட்டார். தொடர்ந்துதொடர்ந்து, வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்குவது இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது எனவும் நாடாளுமன்றத்தில் முறையான விவாதம் நடத்தாமல் இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று வலியுறுத்தினார். மேலும், "வந்தே மாதரம் பாடாவிட்டால் தேசத்துரோகிகள் என்கிறது பாஜக; ஆனால் உண்மையான தேசத் துரோகி பாஜக தான்" என்று விமர்சித்தார்.

தொடர்ந்து திமுக எம்.பி. ஆ. ராசா பேசுகையில், இந்தியாவின் பிரிவினைக்குக் காரணம் காங்கிரஸ் அல்ல என்றும், 1935 அகமதாபாத் இந்து மகாசபை கூட்டத்தில் வ. த. சாவர்க்கர் மற்றும் 'வந்தே மாதரம்' பாடலைச் சுற்றி உருவான அரசியல் சூழலே பிரிவினைக்கு அடித்தளமிட்டது என்றும் குற்றம் சாட்டினார். தேசபக்தி மற்றும் 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயமாக்கும் மசோதா சட்டபூர்வமான மோசடி என்றும், அது தேசத்தைப் பிளவுபடுத்தும் என்றும் கடுமையாக எதிர்த்தார்.

எனினும், எதிர்க்கட்சிகளின் பெரும் அமளிக்கிடையில் வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையிலான "தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026" நிறைவேறியிருக்கிறது. இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியிருக்கும் நிலையில், குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாக மாறும்.