இந்தியா

"நேசத்துக்குரிய சகாவு பினராயி விஜயனை தொலைபேசியில் வாழ்த்தினேன்" - கமல்ஹாசன்

நிவேதா ஜெகராஜா

கேரளாவில் முதல்வராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கு, தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன்.

இதுபற்றி ட்வீட் செய்திருக்கும் கமல்ஹாசன், “என் நேசத்துக்குரிய சகாவு பினராயி விஜயன், இன்று கேரள முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக்கொள்கிறார். நான் உத்தேசிக்கிற அரசியலுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கிறவர்.

நேர்மையான திறமையான நிர்வாகத்தினால் எந்த இடரையும் முறியடிக்கலாம் என நிரூபித்துக்காட்டிய நண்பரை, இன்று போனில் வாழ்த்தினேன். அடுத்த ஐந்தாண்டுகளில் கேரளம் பட்டொளி வீசி பறக்கட்டும். இன்னும் சிறக்கட்டும்” என கூறியுள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் கேரளாவில் ஆளும் எல்.டி.எஃப் கூட்டணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வென்றுள்ளது. கடந்த ஏப்ரல் 6 நடைபெற்ற சட்டனற தேர்தலில், 140 தொகுதிகளில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டுமொருமுறை பிடித்தார் பினராயி விஜயன். கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளில் எல்.டி.எஃப் கூட்டணியும், மீதமுள்ள 41 தொகுதிகளை காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணியும் கைப்பற்றின. வெற்றியைத்தொடர்ந்து, புதிய அரசாங்கத்திற்கான பதவியேற்பு விழா பினராயின் விஜயன்உட்பட 21 அமைச்சர்களுடனனின்று திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் நடைபெறுகிறது.