இந்தியா

'கர்நாடகாவில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது' - கமல்ஹாசன்

JustinDurai

'கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.  

கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கல்லூரி அனுமதி மறுத்த விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணியும் மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் அந்த மாணவிகளுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது'' என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க: 'மாணவர்கள் அமைதி காக்கவேண்டும்' - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை