இந்தியா

கருணாநிதிக்கும் மெரினாவில் இடம் தாருங்கள் : ராகுல் கோரிக்கை

rajakannan

திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெயலலிதாவை போல் மக்களின் குரலாக ஒலித்தவர் கருணாநிதி. அவரது உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர வேண்டும். துக்கமான இந்தத் தருணத்தில் தமிழகத்தின் தற்போதைய தலைவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை” என தெரிவித்துள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடமளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.