காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ள ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமர் மோடியை திடீரென சந்தித்து பேசியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், முதலமைச்சர் கமல்நாத் அமைச்சரவையை மாற்றி அமைக்க வசதியாக 20 அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே இன்று மாலை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ள ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியை திடீரென சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடன் இருந்துள்ளார்.
முன்னதாக மத்தியப் பிரதேச அரசியல் நிலவும் குறித்து அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான சிவராஜ் சிங் சவுகான் பேசினார். இதுதொடர்பாக பேசிய அவர், “ இது காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விஷயம். இதில் எந்தவொரு கருத்தையும் கூற நான் விரும்பவில்லை. நாங்கள் முதல் நாளில் கூறியது போலவே ஆட்சியை கவிழ்ப்பதில் எங்களுக்கு துளி கூட விருப்பம் கிடையாது” எனத் தெரிவித்தார்.