உச்சநீதிமன்றம், ராகுல்
உச்சநீதிமன்றம், ராகுல் twitter pages
இந்தியா

‘ராகுலுக்கு தண்டனை அளித்த நீதிபதியின் பதவி உயர்வு தடை செய்யப்பட்டதா?’- உச்சநீதிமன்ற நீதிபதி விளக்கம்

Prakash J

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது கர்நாடகாவின் கோலாரில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘மோடி’ என்ற சமூகத்தினரை பற்றி அவதூறாகப் பேசியதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மார்ச் 23ஆம் தேதி, சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்மூலம், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இத்தீர்ப்பை நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மா என்பவர் விதித்திருந்தார்.

Rahul Gandhi

இன்னொருபக்கம், கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி, குஜராத்தில் நீதிபதிகளின் பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. பின்னர் இந்த எழுத்துத் தேர்வின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற 68 நீதிபதிகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மாவும் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் குஜராத் நீதித் துறையை சேர்ந்த ரவிகுமார் மேத்தா, சச்சின் மேத்தா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தனர். அவர்கள் தங்கள் மனுவில், ‘‘200 மதிப்பெண்கள் கொண்ட எழுத்துத் தேர்வில் நாங்கள் (ரவிகுமார் மேத்தா, சச்சின் மேத்தா) 135.5 மதிப்பெண் மற்றும் 148.5 மதிப்பெண்களைப் பெற்றுள்ளோம். ஆனால் எங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. எங்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Supreme Court

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ரவிகுமார் அமர்வு விசாரித்தது. வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி குஜராத் மாநில அரசு மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, 68 நீதிபதிகளுக்கும் பதவி உயர்வு வழங்கி கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. குஜராத் உயர்நீதிமன்ற பரிந்துரையின் அடிப்படையில் குஜராத் அரசு இந்த பதவி உயர்வை மேற்கொண்டிருந்தது.

இதன்பின் ‘உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது’ என்ற வாதம் எழுந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, கடந்த 8ஆம் தேதி இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்தது. இதையடுத்து, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ரவிகுமார் அமர்வு மே 12ஆம் தேதி இந்த வழக்கில் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. அப்போது, 68 நீதிபதிகளி பதவி உயர்வை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. இதன்படி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மாவின் பதவி உயர்வுக்கும் தடை விதிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

Justice MR Shah

இந்நிலையில், ‘68 நீதிபதிகளின் பதவி உயர்வும் நிறுத்திவைக்கப்பட்டதாக வெளியான செய்திகள், தவறானவை’ என தீர்ப்பை வழங்கிய நீதிபதி எம்.ஆர்.ஷா நேற்று விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதி, இந்த உத்தரவின்கீழ் வரமாட்டார் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார். ஏனெனில், தகுதியின் அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என உத்தரவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

அப்படி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்றவர்களில் ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கிய கீழமை நீதிமன்ற நீதிபதி வர்மாவும் ஒருவர் என சொல்லப்படுகிறது. ஆகவே இவரின் பதவி உயர்வு நிறுத்திவைக்கப்படவில்லை என நீதிபதி ஷா தெரிவித்திருப்பதாக Bar and bench செய்தி வெளியிட்டுள்ளது.

Supreme Court of India

இதுகுறித்து நீதிபதி எம்.ஆர்.ஷா தெரிவித்துள்ள தகவலில், “அந்த தடை உத்தரவுக்கும் தனிப்பட்ட எந்தவொரு நபருக்கும் எந்த தொடர்பும் இல்லை. merit-cum-seniority (தகுதியிருந்து பணிமூப்பு அடிப்படையில்) அல்லது seniority-cum-merit (சீனியாரிட்டி-கம்-மெரிட்) பற்றியதுதான் இந்த வழக்கு. 68 பதவி உயர்வுகளுக்கும் பெஞ்ச் தடை விதித்ததாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அப்படி வெளியிட்டோர், உத்தரவைப் படிக்கவில்லை என நினைக்கிறேன். உத்தரவில் தகுதிப்பட்டியலொன்று குறிப்பிடப்பட்டிருந்தது. தகுதிப் பட்டியலுக்கு வெளியே உள்ள நபர்களின் (பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற) பதவி உயர்வுகள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளன.

“தகுதி மற்றும் சீனியாரிட்டி விதிமுறைகள் பின்பற்றப்பட்டாலும், நீதிபதி வர்மா தகுதியானவர் என்பதால், இந்த தடையின் வரம்பிற்குள் வரமாட்டார்”
நீதிபதி ஷா

ராகுல் காந்தி வழக்கில் சூரத் நீதிமன்ற நீதிபதி வர்மாவுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை என்று படித்தேன். அதிலும் உண்மையில்லை. தகுதியின் அடிப்படையில் அவரும் பதவி உயர்வு பெற்றுள்ளார். தகுதியின் அடிப்படையில் அவர் 68 பேரில் முதலிடத்தில் உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.