model image
model image freepik
இந்தியா

’வருமானமே இல்லாட்டியும் ஜீவனாம்சம் கொடுக்கணும்’ - கணவருக்கு கண்டிஷன் போட்ட நீதிமன்றம்!

Prakash J

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர் , கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பின்னர், 2016-ஆம் ஆண்டு, தன் கணவர் வரதட்சணை கேட்டு அடித்துத் துன்புறுத்துவதாகக்கூறி மனைவி அவரைவிட்டுப் பிரிந்துள்ளார்.

இந்தச் சூழலில் தன்னுடைய பராமரிப்புச் செலவுக்கு கணவர் தொகை வழங்கவேண்டும் எனக்கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார் அப்பெண். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனைவிக்கு மாதம் 2,000 ரூபாய் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என கணவருக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அப்பெண்ணின் கணவர் மேல்முறையீடு செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ”எனது மனைவி ஒரு பட்டதாரி. அவர் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். அதன்மூலம் அவர் மாதம் ரூ.10,000 சம்பாதிக்கிறார். ஆனால், நானோ கூலி வேலைதான் செய்கிறேன். வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறேன். எனது பெற்றோர் மற்றும் சகோதரிகளை நான்தான் கவனிக்க வேண்டியுள்ளது. மேலும் எனக்கு, உடல்நிலைவேறு சரியில்லை" என அதில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை நிராகரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், "மனைவி வேலை செய்து ரூ.10,000 சம்பாதிக்கிறார் என்பதற்கு, எந்தவித ஆவணங்களையும் பெண்ணின் கணவர் தாக்கல் செய்யவில்லை. உடல்நலத்துடன் இருக்கும் கணவர், உடல் உழைப்பு மூலம் வருமானம் ஈட்ட முடியும். கூலி வேலை செய்தால்கூட தினமும் 300 முதல் 400 ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். வேலை மூலம் வருமானம் இல்லாவிட்டாலும், மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டியது கணவனின் கடமை'' என உத்தரவிட்டுள்ளது.