jitendra awhad FB
இந்தியா

இந்தியாவை அழித்தது சனாதன தர்மம் - தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஜிதேந்திர அவ்ஹாத்

"சனாதன பயங்கரவாதம் இந்தியாவை சாதியத்திற்குள் தள்ளியது" என்றும், சமூக சீர்திருத்தவாதிகளை எதிர்ப்பவர்கள் சனாதன பயங்கரவாதிகள்தான் என்றும் கூறிய எம்.எல்.ஏ ஜிதேந்திர அவ்ஹாத்தை பாஜக கடுமையாக சாடியுள்ளது.

Vaijayanthi S

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஜிதேந்திர அவ்ஹாத், "சனாதன தர்மத்திற்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்தார். "சனாதன தர்மம் இந்தியாவை அழித்துவிட்டது. சனாதன தர்மம் என்ற ஒரு மதம் ஒருபோதும் இருந்ததில்லை. நாங்கள் இந்து தர்மத்தைப் பின்பற்றுபவர்கள்" என்று அவ்ஹாத் கூறினார்.

இது குறித்து முன்னதாக, X வலை தளத்தில் பதிவிட்ட அவர், "சனாதன தர்மம் இந்தியாவை நாசமாக்கிவிட்டது. சனாதன தர்மம் என்று எந்த மதமும் இருந்ததில்லை. நாங்கள் இந்து தர்மத்தைப் பின்பற்றுபவர்கள். இந்த சனாதன தர்மம்தான் நமது சத்ரபதி சிவாஜி மகாராஜின் முடிசூட்டு விழாவை மறுத்தது. இந்த சனாதன தர்மம் நமது சத்ரபதி சம்பாஜி மகாராஜை அவமதித்தது. இந்த சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் ஜோதிராவ் பூலேவை படுகொலை செய்ய முயன்றனர். அவர்கள் சாவித்ரிபாய் பூலே மீது பசு சாணம் மற்றும் அழுக்கை வீசினர்” என்றார்.

“இந்த சனாதன தர்மமே ஷாகு மகாராஜைக் கொல்ல சதி செய்தது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தண்ணீர் குடிக்கவோ அல்லது பள்ளியில் சேரவோ கூட அனுமதிக்கவில்லை. இறுதியாக சனாதன தர்மத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தவர், மனுஸ்மிருதியை எரித்தவர், அதன் அடக்குமுறை மரபுகளை நிராகரித்தவர் பாபாசாகேப் அம்பேத்கர் தான். மனுஸ்மிருதியை உருவாக்கியவரே இந்த சனாதன மரபிலிருந்து தோன்றினார். சனாதன தர்மமும் அதன் சனாதன சித்தாந்தமும் வக்கிரமானவை என்று வெளிப்படையாகச் சொல்ல ஒருவர் பயப்படக்கூடாது." என தனது X தளப் பதிவில் பகிர்ந்துள்ளார்.

சனாதன தர்மத்தையும் அதன் சித்தாந்தத்தையும் திரிபுபடுத்தப்பட்டவை என்று மக்கள் தயங்கக்கூடாது என்று ஜிதேந்திர அவ்ஹாத் கூறினார்.1980களில் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டங்களின் போது மாணவர் ஆர்வலராக அவ்ஹாத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அவர் காங்கிரஸின் மாணவர் பிரிவான NSUI-யில் சேர்ந்து 2002 முதல் 2008 வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

அவ்ஹாத் சமூக-மத இயக்கங்களில் முனைவர் பட்டம் பெற்றவர் மற்றும் ஓபிசி வஞ்சரி சமூகத்தைச் சேர்ந்தவர்.

"சனாதன பயங்கரவாதம் இந்தியாவை சாதியத்திற்குள் தள்ளியது" என்றும், சமூக சீர்திருத்தவாதிகளை எதிர்ப்பவர்கள் சனாதன பயங்கரவாதிகள்தான் என்றும் கூறிய எம்.எல்.ஏ ஜிதேந்திர அவ்ஹாத்தை பாஜக கடுமையாக சாடியுள்ளது.