இந்தியா

உறவினரின் தலையை வெட்டி நண்பர்களுடன் செல்ஃபி எடுத்த இளைஞர்! நிலத் தகராறில் கொடூர கொலை!

Sinekadhara

ஜார்க்கண்டில் தனது உறவினருடன் ஏற்பட்ட நிலத் தகராறில் அவருடைய தலையை வெட்டியது மட்டுமல்லாமல், நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்திலுள்ள முர்ஹு பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. டிசம்பர் 2ஆம் தேதி 55 வயதான தேசாய் முந்தா என்ற நபர் போலீசில் புகார் அளித்தார். அதில், ”டிசம்பர் 1ஆம் தேதி எனது குடும்பத்தார் அனைவரும் நெல் வயலில் வேலைக்குச் சென்றிருந்தோம். அப்போது எனது மகன் கனு முந்தா(24) மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலை வீடு திரும்பியபோது எனது மகன் கனுவை உறவினர் சாகர் முந்தா (20) மற்றும் அவரது நண்பர்கள் கடத்திச் சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். அவரை எங்கு தேடியும் காணவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரின்பேரில் முதற்கட்ட வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிக்குழு அமைத்து கனுவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சாகர் முந்தாவை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து கனுவின் தலை துண்டிக்கப்பட்ட உடலை குமாங் கோப்லா காட்டுப்பகுதியில் கண்டுபிடித்தனர். அங்கிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள துல்வா துங்க்ரி பகுதியில் கனுவின் தலையை கண்டுபிடித்தனர். அதுமட்டுமில்லாமல், சாகர் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து வெட்டப்பட்ட தலையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டாடியதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் அதிகாரி கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அவர்களிடமிருந்து இறந்தவரின் செல்போன் உட்பட 5 செல்போன்கள், ரத்தக்கறை படிந்த 2 கூரிய ஆயுதங்கள், ஒரு கோடரி மற்றும் ஒரு கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். சாகர் மற்றும் இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஆகிய இருவரும் முக்கிய குற்றவாளிகளாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீண்ட நாட்களாகவே இரு குடும்பத்தாருக்கும் இடையே நிலத் தகராறு இருந்துவந்ததாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட சண்டைகளே இந்த கொடூர கொலைக்கு காரணம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.