இந்தியா

ரேசன் அட்டை ரத்தால் சிறுமி பட்டினி சாவு: விசாரணை நடத்துகிறது மத்திய குழு

Rasus

ஜார்கண்ட் மாநிலத்தில் 11 வயது சிறுமி ஒருவர் பட்டினியால் உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த மத்திய குழு ஒன்று அனுப்பப்படும் என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் சிம்தேகா மாவட்டத்தில் உள்ளது கரிமாதி கிராமம். இங்கு வசித்துவரும் கோலி தேவியின் மகள் சந்தோஷி தேவி. பள்ளியில் மதிய உணவை பெற்று, சாப்பிட்டு வந்த சந்தோஷியின் குடும்பத்தினர் ரேஷன் கடை உணவுப் பொருட்களை நம்பியே உயிர் வாழ்ந்து வந்தனர். துர்கா பூஜை பண்டிகைக்காக பள்ளி விடுமுறை விடப்பட்டது. இதனால், சந்தோஷிக்கு பள்ளியில் வழக்கமாக கிடைக்கும் மதிய உணவு கிடைக்கவில்லை. அதனால், வீட்டில் சமைக்கப்படும் உணவையே சந்தோஷி நம்பி இருந்தார். இந்நிலையில், வீட்டில் இருந்த உணவுப்பொருட்களும் சில நாட்களில் தீர்ந்துவிட்டதால் பட்டினியால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 11 வயது சிறுமி சந்தோஷி பட்டினியால் உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த மத்திய குழு ஒன்று அனுப்பப்படும் என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார். இந்த மரணம் தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஏழைகள் பட்டினியால் உயிரிழப்பது மிகவும் கவலைப்படவேண்டிய ஒன்று என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஜார்கண்ட் அரசு 50,000 ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.

இதனிடையே, சிறுமியின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட ரேசன் அட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், அதனாலேயே ரேஷன் கிடைக்காமல் சிறுமி உயிரிழக்க நேர்ந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.