இந்தியா

2 முறை தப்பி, பயங்கரவாதிகளை வீழ்த்திய துணிச்சல் வீரர்

2 முறை தப்பி, பயங்கரவாதிகளை வீழ்த்திய துணிச்சல் வீரர்

webteam

பயங்கரவாதிகளின் துப்பாக்கிக் குண்டிலிருந்து இரண்டு முறை தப்பி, துணிச்சலாகச் செயல்பட்டு இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றார் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர்.

குப்வாராவில் உள்ள ராணுவ முகாமிற்குள் நேற்று புகுந்த மூன்று பயங்கரவாதிகள், கேப்டன் ஒருவரையும், இரண்டு வீரர்களையும் சுட்டுக்கொன்றனர். அப்போது புறக்காவல் பணியிலிருந்த ரிஷி குமார் என்ற வீரர், பயங்கரவாதிகள் மேலும் முன்னேறி வரும் வரை காத்திருந்து அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.

பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், இரண்டு குண்டுகள் ரிஷியின் தலையைத் தாக்கின. இருப்பினும், குண்டு துளைக்காத தலைக்கவசம் அணிந்திருந்ததால் அவர் உயிர் தப்பினார். ஆனாலும், குண்டுகளால் ஏற்பட்ட தாக்கத்தால் அவர் கீழே விழுந்தார். இதிலிருந்து உடனடியாக மீண்ட ரிஷி, மிகுந்த வீரதீரத்துடன் செயல்பட்டு இரண்டு பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றார். அந்த நேரம் அவரது துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்ததால், சுட்டுவீழ்த்தப்பட்டவர்கள் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மற்றொரு பயங்கரவாதியை சுட முயன்றார், அப்போது அந்த பயங்கரவாதி ரிஷியை சுட்டுவிட்டு தப்பியோடினார். இதில் லேசான காயமடைந்த ரிஷி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எட்டு ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வரும் ரிஷி குமார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.