news click
news click pt web
இந்தியா

“முதலீடுகளுக்கு இந்தியா பாதுகாப்பான இடமா?” - நியூஸ் க்ளிக் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்!

Angeshwar G

நியூஸ் க்ளிக் நிறுவனத்தில் சோதனை

சீனாவிடம் இருந்து பணம் பெற்றதாக நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய டெல்லி காவல்துறை, அதன் அலுவலகத்திற்கு சீல் வைத்து உரிமையாளரையும் மனித வளத்துறை அதிகாரியையும் கைது செய்தது.

நியூஸ் கிளிக்

சோதனை தொடர்பாகவும் கைது தொடர்பாகவும் நியூஸ் க்ளிக் நிறுவனம், “சீன நிறுவனம் அல்லது சீன அதிகாரத்தின் பேரில் எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை. சீன பிரசாரத்தை எங்கள் இணைய தளத்தில் பரப்புவதில்லை. மேலும், எங்களது நிறுவனம் பெற்ற அனைத்து நிதியும் பொருத்தமான வங்கி மூலமே பெறப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. சட்டப்படி போராடுவோம்” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும் செய்தி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையும் நிறுவனரின் கைதும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பத்திரிகை நிறுவனங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்நிலையில், Worldwide Media Holdings மற்றும் நியூஸ் க்ளிக் நிறுவனத்திற்கு இடையே ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க வழக்கறிஞர் Jason Pfetcher ஒப்பந்தம் குறித்தும் பயன்படுத்தப்பட்ட நிதி, நிதி பெறப்பட்ட விபரம் ஆகியவற்றை குறித்து விளக்கமளித்துள்ளார்.

Jason Pfetcher

இது குறித்து அவர், “என் பெயர் ஜேசன் பிஃபெட்சர். அமெரிக்காவில் வழக்கறிஞர். Worldwide Media Holdings (WMH) இந்தியாவில் உள்ள நியூஸ் க்ளிக் நிறுவனத்திற்கு செய்த முதலீடு தொடர்பாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

பல ஆண்டுகளாக ThoughtWorks, Inc என்ற ஐடி ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அந்த நிறுவனம் பிரிட்டிஷ் தனியார் பங்கு நிறுவனமான் Apax Partnersக்கு 2017 ஆம் ஆண்டு விற்கப்பட்ட போது நான் அதிலிருந்து விலகினேன். பின் ThoughtWorks, Inc நிறுவனரான நெவில் ராய் சிங்கத்துடன் இணைந்து பணியாற்றினேன்.

நியூஸ் கிளிக் வழக்கு - இருவருக்கு 7 நாள் போலீஸ் காவல்

பின் நாங்கள் People’s Support Foundation, Limited (PSF) என்ற மக்கள் ஆதரவு அறக்கட்டளை என்ற தனியார் அறக்கட்டளையை உருவாக்கினோம். நான் குழு உறுப்பினராக தொடக்கத்தில் இருந்தே இருக்கிறேன். PSF க்கு அளிக்கப்பட்ட அனைத்து நிதிகளும் ThoughtWorks நிறுவனத்தின் விற்பனையில் இருந்து பெறப்பட்டது. வெளிநாட்டு அரசாங்கத்திடம் இருந்து நிதி பெற்றதில்லை.

WMH என்பது லாபநோக்கற்ற முதலீட்டு நிறுவனம். உலகெங்கும் உள்ள மக்களை மையமாக கொண்டு செயல்படும் பல முற்போக்கான ஊடகங்களில் பல்வேறு முதலீடுகளை செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு இறுதியில் WMH நோக்கங்களுடன் ஒத்துப்போகும் நிறுவனமாக நியூஸ்க்ளிக்-ஐ அடையாளம் கண்டது.

இந்த செயல்பாட்டின் ஒரு பகுதியாகத்தான் நான் டெல்லி சென்று நியூஸ் க்ளிக் ஆசிரியர் மற்றும் அதன் சட்ட ஆலோசகருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பின் நியூஸ் க்ளிக்கில் முதலீடு செய்வது நல்லது என்று தீர்மானிக்கப்பட்டது. முதலீடு 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இறுதி செய்யப்பட்டது. WMH சார்பாக பங்குதாரர்கள் சந்திப்பில் நான் கலந்து கொண்டாலும், WMH அல்லது PSF நிறுவனங்கள் நியூஸ் க்ளிக் செய்தி நிறுவனத்தின் பணிகளில் ஆதிக்கம் செய்யவோ அல்லது இயக்கவோ இல்லை.

ப்ரபிர் புர்கயஸ்தா

ப்ரபிர் புர்கயஸ்தாவை ThoughtWorks நிறுவனத்தில் பணிபுரியும் போது சந்தித்தேன். ஊழியர்களாக அங்கு பல ஆண்டுகள் பணிபுரிந்தோம். 2021 ஆம் ஆண்டு நியூஸ் க்ளிக் நிறுவனம் பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு அதன் அலுவலகங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது.

பல மாதங்களாக நியூஸ் க்ளிகின் பத்திரிக்கையாளர்கள், ஊழியர்கள், நிறுவனர் ப்ரபுர் மற்றும் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் பலமுறை விசாரிக்கப்பட்டனர்.

WMH நியூஸ் க்ளிக் நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீடு குறித்து ஆதாரம் கேட்ட போதெல்லாம் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. WMH நிறுவனம் செயலிழந்த நிறுவனமாக இருந்ததாக தகவல் பரப்பப்பட்ட போதெல்லாம் டெலாவர் மாநிலத்தில் நிறுவனம் நல்ல நிலையில் இருந்தது என்பதற்கான ஆதாரங்களையும் WMH நிறுவனம் அளித்துள்ளது.

நெவில் ராய் சிங்கம்

அமித் மற்றும் ப்ரபுர் கைது செய்யப்பட்ட சூழலில் நியூஸ் க்ளிக் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. நியூஸ் க்ளிக்கில் முதலீடு செய்யப்பட்ட நிதிகளின் ஆதாரம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகின்றன. ஆகஸ்ட் 5, 2023 ஆன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட அவதூறான கட்டுரையே இந்த நடவடிக்கைகளுக்கு அடிப்படை காரணம் என தோன்றுகிறது.

PSF தொடர்பாக நிருபர்களின் கேள்விக்கு நான் அளித்த பதிலில், ‘எந்த வெளிநாட்டு தனிநபர் அமைப்பு, அரசியல் கட்சி அல்லது அரசாங்கத்திடமிருந்தும் நாங்கள் எந்த நிதியுதவியையும் பெறவில்லை’ என்று கூறியதை நியூயார்க் டைம்ஸ் சேர்க்கத் தவறிவிட்டது. அதற்கு பதில் ‘நிதியுதவிக்கான ஆதாரம் சீனாவில் இருந்து வந்திருக்கலாம்’ என கூறி வாசகர்களை நம்ப வைத்தது. அவர்களின் தவறான செய்திகள் அப்பாவி பத்திரிக்கையாளரை கைது செய்வதற்கு நேரடியாக பங்களித்துள்ளன.

20 ஆண்டுகளாக இந்தியாவிற்கு சென்று வருகிறேன். உள்ளூர் சட்டங்களுக்கு மதிப்பளிப்பதில் நான் எப்போதும் மனசாட்சியுடன் செயல்பட்டுள்ளேன். இந்த முதலீடு இந்தியச் சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் பின்பற்றுகிறதா என்பதை உறுதி செய்ய வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இதுபோன்ற அடக்குமுறைகளைப் பார்க்கும் போது இந்திய சட்டத்தை கவனமாக பின்பற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியா பாதுகாப்பான இடமா என்ற கேள்வி எழுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.