மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தின் தாமதத்திற்கு இந்திய அதிகாரிகளே காரணம் என்று ஜப்பானின் முன்னாள் அமைச்சர் ஹிடேகி மகிஹாரா குற்றம்சாட்டியுள்ளார். இந்திய அதிகாரிகள் தங்கள் சொந்த நலன்களை மட்டுமே முன்னிறுத்திப் பேச்சுவார்த்தை நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர் ; M. மீரா
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் செப்டம்பர் 2017-இல் அடிக்கல் நாட்டப்பட்டு, மும்பை மற்றும் அகமதாபாத் இடையே பணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில், மணிக்கு 320 கி.மீ வேகத்தில் செல்லும். இதன்மூலம் 6 மணி நேரப் பயணம் 2 மணி நேரமாகக் குறையும். இந்தத் திட்டம் ஜப்பான் நாட்டின் உதவியுடன் அமைக்கப்படுகிறது. இந்தப் பாதை இரண்டு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை சுமார் எட்டு மணி நேரத்திலிருந்து சுமார் இரண்டு மணிநேரமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முக்கிய புல்லட் ரயில் வழித்தடத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு முழுக்க முழுக்க இந்தியத் தரப்பே காரணம் என்று மகிஹாரா X தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தத் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டதற்கு இந்திய அமைச்சர் மற்றும் அதிகாரிகளே காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜப்பானின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஹிடேகி மகிஹாரா, ஜூலை 15 அன்று, ஷிங்கன்சென் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாகவும், இந்திய அதிகாரிகள் தங்கள் சொந்த நலன்களை மட்டுமே முன்னிறுத்திப் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் குற்றமசாட்டி, அவர்கள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் அசல் ஷிங்கன்சென் (Shinkansen) மாதிரியிலிருந்து விலகிச் சென்றுவிட்டது என்று ஒரு ஜப்பானிய செய்தி நிறுவனம் கூறியிருந்ததைத் தொடர்ந்து மகிஹாரா இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் வழித்தடமான மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் (MAHSR) திட்டத்தின் முதல் பகுதி, 2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் பயணிகள் சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் முன்னாள் அமைச்சரின் இந்த கருத்துகளை முற்றிலும் மறுத்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், இது "ஒரு தனிநபரின் கருத்து. மேலும் இது உண்மைக்கு முற்றிலும் மாறானது" என்றும் தெரிவித்தார்.