அபிஜித் திப்கே X
இந்தியா

டெல்லி | காவலர்களை தாக்கியது யார்? அபிஜித் திப்கே விளக்கம்!!

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவலர்களைத் தாக்கியது மாணவர்கள் அல்ல; பாஜக அனுப்பியவர்கள் தான் தாக்குதல் நடத்தினர் என சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே விளக்கமளித்துள்ளார்.

Premkumar S

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே வன்முறை ஏற்பட்டதில், நூற்றுக்கணக்கான காவலர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் காயமடைந்திருந்தனர். எனினும், ஜூலை 26 தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து போராட்டம் நிறைவடைந்திருக்கிறது. அதேசமயம், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்பட்ட 13 வழக்குகளும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

காயமடைந்த காவலர்களின் குடும்பத்தினர்

இந்தச்சூழலில் தான், நேற்றைய தினம் போராட்டத்தில் காயமடைந்த காவலர்களின் குடும்பத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பேசிய அவர்கள், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது வேதனையளிப்பதாகவும் பொதுப் பணியில் இருக்கும் அதிகாரிகளைத் தாக்கியவர்களுக்கு நீதிமன்றம் மூலம் உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரினர். மேலும், அரசியல் தலைவர்கள் எங்கள் தரப்பு கருத்துக்களையும் கேட்க வேண்டும். ஒரு தரப்பு செய்தி மட்டுமே பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், இது உண்மையல்ல எனவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, சிஜேபி (CJP) நிறுவனர் அபிஜித் திப்கே பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். காவலர்களை தாக்கியது மாணவர்கள் அல்ல; போராட்டத்தை சீர்குலைக்க பாஜக அனுப்பிய நபர்கள்தான் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் ஆனால், மாணவர்கள் மீது பழி சுமத்த முயன்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ”காவல் துறையினரின் குடும்பத்தினருக்கு அனுதாபத்தைத் தெரிவிக்கிறேன். ஆனால், காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் குடும்பத்தினர் நிலை என்ன?” எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதேசமயம், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.