கொரோனா தடுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் நாடு முழுவதும் சுய ஊரடங்கு தொடங்கியது
கொரோனா தடுப்பு தீவிர நடவடிக்கைகளின் ஒரு முன்னோட்டமாக சுய ஊரடங்கை கடைப்பிடிக்கப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் வைத்தார். தமிழகத்தில் ஒரு சில சேவைகளைத் தவிர மற்ற அனைத்தும் இயங்காது என அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு, தனியார் பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில்கள், பயணிகள் ரயில்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில உள்ளூர் விமானச் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கால் டேக்ஸி, ஆட்டோக்கள்,லாரிகள், தண்ணீர் லாரிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுய ஊரடங்கின் போது மருத்துவமனைகள், மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பால் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் பால் விநியோகம் நிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், பால் விநியோகம் வழக்கம் போல் நடைபெறும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும். குறைந்த ஊழியர்களுடன் அனைத்து பெட்ரோல் பங்குகளும் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். புறநகர் மின்சார ரயில்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ள ட்வீட்டில், இந்த சுய ஊரடங்கு COVID-19 அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்திற்கு மிகப்பெரிய பலத்தை வழங்கும். நாம் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். வீட்டிற்குள் இருப்போம். ஆரோக்கியத்துடன் இருப்போம் என குறிப்பிட்டுள்ளார்