இந்தியா

ஷேக் நகர் இனி சிவநகர்! அம்பாலா சவுக் இனி 'அனுமான் சவுக்'- ஜம்முவில் ஊர்ப்பெயர்கள் மாற்றம்

ச. முத்துகிருஷ்ணன்

காஷ்மீர் தலைநகர் ஜம்முவில் இரு முக்கிய இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான தீர்மானம் ஜம்மு மாநகராட்சி கூட்டத்தில் பாஜக உறுப்பினர் சாரதா குமாரி என்பவரால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் படி “ஷேக் நகர்” என்ற பகுதி “சிவ நகர்” என மாற்றப்பட உள்ளது. “அம்பாலா சவுக்” என்ற பகுதி “ஹனுமான் சவுக்” என மாற்றப்பட உள்ளது.

சனிக்கிழமையன்று நடைபெற்ற ஜம்மு மாநகராட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் அப்பகுதிகளுக்கு பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு மாநகராட்சியில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை உள்ள நிலையில் இந்த 2 ஊர்ப்பெயர்களின் பெயர்களை மாற்றும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றியதாக ஜம்மு மாநகராட்சி மேயர் சந்தர் மோகன் குப்தா தெரிவித்தார்.

மறுபெயரிடுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக தீர்மானம் இப்போது ஜம்மு காஷ்மீர் சிவில் செயலகத்திற்கு அனுப்பப்படும். எனினும் இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் காஷ்மீரில் ஊர் பெயர்களை மாற்றுவதற்கு பதில் அங்குள்ள பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு தருவதில் கவனம் செலுத்த மாநில அரசுக்கு சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் அறிவுறுத்தியுள்ளார்.