இந்தியா

2 ஆண்டுகள் இடைவெளி - கோலாகலமாக தொடங்கிய பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம்

நிவேதா ஜெகராஜா

ஒடிசா மாநிலத்தில் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்ட விழா இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஒடிசா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகருக்கு அருகே உள்ள புரியில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழா இன்று முதல் ஆரம்பமாகிறது. இது 42 நாட்களுக்கு நடக்கும் மிக நீண்ட திருவிழாவாகும். பிரகாசமான வண்ணங்கள், உற்சாகமான மக்கள், நெரிசலான கடைகள் மற்றும் மகிழ்ச்சியான கைவினைஞர்கள் உள்ளிட்ட ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த திருவிழாவிற்கு கொரோனா பரவும் அச்சுறுத்தல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் வெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் ஜெகந்நாதர், தேவி சுபத்ரா, பாலபத்ரா வலம் வர உள்ளனர். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “தேரோட்டத்தின் சிறப்பு நாளுக்கு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஜெகந்நாதரின் நிலையான ஆசீர்வாதத்திற்காக நாம் பிரார்த்தனை செய்வோம். நாம் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தர்மேந்திர பதான் ஆகியோர் ஒடிசா ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.