இந்தியா

ஆளுநரை சந்திக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி

webteam

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர ஆளுநர் ஈஎஸ்எல் நரசிம்மனை ஹைதராபாதில் உள்ள ராஜ் பவனில் இன்று மாலை 4.30 மணிக்கு சந்திக்க திட்டமிட்டுள்ளார். 

ஆந்திராவில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி கண்டது. இதேபோல மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 151 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனையடுத்து சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராக வரும் 30-ஆம் தேதி பதவியேற்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு பல தலைவர்களை அழைக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். அதன்படி தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை இன்று மாலை சந்திக்கும் ரெட்டி, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறார். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியை நாளை மதியம் 12 மணிக்கு ஜெகன்மோகன் ரெட்டி சந்திக்க உள்ளார். 

இதனிடையே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சட்டமன்ற குழுவினர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சட்டமன்றத் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர ஆளுநர் நரசிம்மனை ஹைதராபாதில் உள்ள ராஜ் பவனில் இன்று மாலை 4.30 மணிக்கு சந்திக்க திட்டமிட்டுள்ளார். அப்போது ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரவுள்ளார்.