இந்தியா

திருப்பதி தேவஸ்தான தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி உறவினர் நியமனம்!

webteam

திருப்பதி தேவஸ்தான தலைவராக, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் செயலாளருமான சுப்பா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். 

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்ற பின், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். பல ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய  அவர், இப்போது திருப்பதி தேவஸ்தான தலைவராக தனது நெருங்கிய உறவினர் சுப்பா ரெட்டியை நியமித்துள்ளார். இவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும் இருக்கிறார்.

ஆந்திர மாநில சிறப்பு தலைமைச் செயலாளர் மன்மோகன் சிங், இந்த நியமனத்துக்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார். தேவஸ்தான கமிட்டியின் மற்ற உறுப்பினர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சிங் தெரிவித்துள்ளார். திருப்பதி தேவஸ்தான தலைவர் பொறுப்பு, செல்வாக்கு மிக்க பொறுப்புகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.