இந்தியா

மேடையிலே ‘சிஏஏ’ நகலை கிழித்துவிட்டு பதக்கம் வாங்கிய மாணவி

webteam

மேற்கு வங்கத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பதக்கம் பெறுவதற்கு முன்னதாக மாணவி ஒருவர் சிஏஏ நகலை கிழிக்கும் காட்சிகள் பரவி வருகிறது.

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக டெல்லி, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் ஏற்பட்ட போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டு, மாணவர்கள் மற்றும் போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த போராட்டங்களும், மோதல்களும் நாடு முழுவதும் கவனத்தை திருப்பியுள்ளது.

இதற்கிடையே புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழக்கத்தில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற ரபிஹா என்ற மாணவி, தனக்கான தங்கப்பதக்கத்தை ஏற்க மறுத்தார். குடியரசுத்தலைவர் சென்றபின்பே தாம் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டதாக கூறி கண்டனம் தெரிவிக்கும் விதமாக பதக்கத்தை நிராகரிப்பதாக அவர் தெரிவித்தார். சிஏஏவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை அவர் வெளிப்படுத்தினார். கண்ணீர் மல்க அவர் பேசிய விவகாரம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் தேப்ஸ்மிதா சவுத்திரி என்ற மாணவி, மேடையில் தங்கப் பதக்கத்தை வாங்குவதற்கு முன்பாக குடியுரிமை சட்டத்திருத்த நகலை மேடையிலேயே கிழித்தார். பின்பு ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ எனக்கூறிவிட்டு, தனது தங்கப்பதக்கத்தை வாங்கிச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.