முஸ்லிம் வாக்காளர்களை கவரும் நோக்கில் இந்த மாட்டிறைச்சி விழா நடத்தப்பட்டிருக்கிறது . இது ஒரு "மலிவான அரசியல் தந்திரம்" என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில பொதுச் செயலாளர் பி.எம்.ஏ. சலாம் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசியவர், மாட்டிறைச்சி விழா மற்றவர்களை எரிச்சல்படுத்தியிருக்கும், முஸ்லிம்களின் ஆதரவை பெறும் நோக்கில் இந்த மாட்டிறைச்சி திருவிழாவை நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இந்த திருவிழா பாஜகவுக்கு மறைமுகமாக உதவுவதாகவே இருக்கிறது. இது இந்து மத உணர்வுகளை புண்படுத்தியிருக்கும் என்று சலாம் கூறியுள்ளார்.
ஊடகங்களிடம் பேசும் போது மாட்டிறைச்சிக்கும் குறிப்பிட்ட சமூகத்துக்கும் என்ன தொடர்பு என்றும், "மாட்டிறைச்சிக்கும் முஸ்லிம்களுக்கும் என்ன தொடர்பு" என்றும் சலாம் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்கள் மற்றும் மாட்டிறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களில் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் முஸ்லிம்களாக இருக்கிறார்கள்.
மாட்டிறைச்சிக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்திய அவர், மாட்டிறைச்சி விழா போராட்டம் என்பது சாதாரண முஸ்லிம் வாக்காளர்களை தவறாக வழிநடத்தவும் "ஏமாற்றவும்" சிபிஐ(எம்) மேற்கொண்ட முயற்சி என்றும் விமர்சித்தார்.
மாட்டிறைச்சி சாப்பிடாதவர்களை சாப்பிட சொல்லி யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். அதே நேரத்தில், கேரளா ஸ்டோரி 2 போன்ற படங்கள் சமூகங்களிடையே பிளவுகளை உருவாக்குகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கேரளா ஸ்டோரி 2 டிரெய்லரில் ஒரு கதாபாத்திரம் மாட்டிறைச்சியை வலுக்கட்டாயமாக ஊட்டுவது போன்ற ஒரு காட்சி இருப்பதால், இந்த பிரச்சினை முக்கியத்துவம் பெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், SFI மாட்டிறைச்சி விழாவை ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.