இந்தியா

ஜன.1 முதல் ஆந்திராவுக்கு தனி உயர்நீதிமன்றம் - குடியரசு தலைவர் அறிவிப்பு

ஜன.1 முதல் ஆந்திராவுக்கு தனி உயர்நீதிமன்றம் - குடியரசு தலைவர் அறிவிப்பு

rajakannan

ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு தனி உயர்நீதிமன்றம் அமைப்பது குறித்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார். 

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலம் 2014 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. நீண்ட போராட்டங்களுக்கு பிறகு தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பாக ஐதராபாத் தலைநகரமாக இருந்தது. உயர்நீதிமன்றம் உட்பட அனைத்து முக்கிய அரசு அலுவலகங்களும் ஐதராபாத்தில் தான் இருந்தது. பின்னர், மெல்ல மெல்ல ஒவ்வொன்றாக ஆந்திர மாநிலத்தில் உருவாக்கப்பட்டது. அமராவதி ஆந்திராவுக்கான தலைநகரானது. மாநிலங்கள் பிரிந்ததை போலவை ஐதரபாத்தில் உள்ள உயர்நீதிமன்றமும் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இருதரப்பினரும் முன் வைத்தனர். 

இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இனி ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு தனித்தனியாக உயர்நீதிமன்றங்கள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கான தனி உயர்நீதிமன்றம் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமராவதி நகரில் செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திர உயர்நீதிமன்றத்திற்கு 16 நீதிபதிகளும், தெலுங்கானாவுக்கான உயர்நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகளும் இருப்பார்கள். இதனையடுத்து, அடுத்த நான்கு நாட்களுக்கு புதிய உயர்நீதிமன்றத்திற்கான கட்டடத்தை ஆந்திர அரசு தயார் செய்ய வேண்டும். ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஆந்திராவுக்கு தனி உயர்நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவுருத்தியிருந்தது. 

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்த தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெலுங்கானாவுக்கான தனி உயர்நீதிமன்றம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.