இந்தியா

சர்ச்சை: லட்சத்தீவின் உயர்நீதிமன்ற எல்லையை கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்கு மாற்ற பரிந்துரை

JustinDurai

லட்சத்தீவை கேரள உயர் நீதிமன்ற நிர்வாக எல்லையிலிருந்து கர்நாடக உயர் நீதிமன்ற நிர்வாக எல்லைக்கு மாற்ற அத்தீவின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேல் பரிந்துரை செய்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

லட்சத்தீவின் நிர்வாகியாக பதவியேற்ற நாளில் இருந்து பிரஃபுல் கோடா படேல் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் லட்சத்தீவில் மாட்டிறைச்சிக்கு தடை, மதுபான விடுதிகளுக்கு அனுமதி, சாலைகளை அகலப்படுத்த மீனவர்களின் குடிசை வீடுகளை அகற்ற உத்தரவு என அடுத்தடுத்து அதிரடி மாற்றங்களை கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறார்.

இதற்கு லட்சத்தீவு மக்களும், அந்தத் தீவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கேரள மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த சர்ச்சையாக லட்சத்தீவின் உயர் நீதிமன்ற எல்லையை கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு மாற்ற நிர்வாகி பரிந்துரை செய்துள்ளார்.