14 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி- சி 47 ராக்கெட் வரும் 25-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
25-ஆம் தேதி காலை 9.28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பிஎஸ்எல்வி- சி 47 ராக்கெட் ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான ‘கார்டோசாட் - 3’ செயற்கைகோள் மற்றும் 13 நானோ வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இந்த 13 நானோ செயற்கைக்கோள்களும் அமெரிக்காவுக்கு சொந்தமானவை.
இந்தியாவின் ‘கார்டோசாட்-3’ செயற்கைகோள் மேம்படுத்தப்பட்ட வகையைச் சேர்ந்தது. துல்லியமாக படங்களை அனுப்பும் திறன் கொண்ட இந்த செயற்கைக்கோள் புவி சுற்றுவட்டபாதையில் 509 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ ஏவும் 74-ஆவது ராக்கெட் இதுவாகும். ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட் டவுன் வரும் 23-ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.