இந்தியா

இஸ்ரோ - மங்கள்யான் தொடர்பு முறிந்தது! 8 ஆண்டு நீடித்த சரித்திரப் பயணத்திற்கு பிரியாவிடை!

ச. முத்துகிருஷ்ணன்

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக எட்டு ஆண்டுகளுக்கு முன் இஸ்ரோ அனுப்பிய விண்கலமான “மங்கள்யான்” இன்று அதன் தரைக் கட்டுப்பாட்டு மையங்களுடான தொடர்பை முற்றிலும் இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய அறிவியல் சாதனைகளில் ஒன்றாக கருதப்படும் “மங்கள்யான்” செவ்வாய் கிரகத்திற்கு இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் 2013 ஆம் ஆண்டு நவம்பர் 5 அன்று அனுப்பப்பட்டது. ஆறு மாத ஆயுட்காலத்துடன் அனுப்பப்பட்ட மார்ஸ் ஆர்ப்பிட்டர்ஸ் மிஷன் (MOM), திட்டமிட்டதை விட 2 ஆண்டுகள் அதிகமாக 8 ஆண்டுகளை கடந்த பின்னும் செவ்வாய் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது

இந்நிலையில் சுமார் ரூ.450 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் செயற்கைக்கோளான மங்கள்யான் விண்கலம் அதன் தரைக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு முற்றிலும் இழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அந்த விண்கலத்தின் எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்து போனதே இந்த தொடர்பு முறிவுக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.