மேற்கு ஆசியாவில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக ஏர் இந்தியா தனது இஸ்ரேல் -டெல்லி விமானச் சேவைகளை ஜூலை 31 வரை ரத்து செய்துள்ளது.
செய்தியாளர் - M. மீரா
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், வளைகுடா முழுவதும் மறைமுக மோதல்களும் தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உலகளவில் கச்சா எண்ணெய் விலை பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் போர் சர்வதேச விமானச் சேவைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் இஸ்ரேலுக்கான தனது விமானச் சேவைகளை மே 31 வரை நிறுத்தி வைத்திருந்த நிலையில் தற்போது ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது.
போர் பதற்றம் , மாறி மாறி அள்ளி வீசப்படும் அமெரிக்கா–ஈரான் எச்சரிக்கைகள், பாதுகாப்பு காரணங்கள், பேச்சுவார்த்தையில் இழுபறி, எகிறிய விமான எரிபொருள் விலை - போன்ற பல காரணங்களுக்காக ஏர் இந்தியா புது டெல்லி–இஸ்ரேல் நேரடி விமானச் சேவையை நிறுத்தியுள்ளது.
இந்த முடிவு, விமான நிறுவனத்தின் புது டெல்லி - இஸ்ரேல் நேரடி சேவையைப் பாதிக்கிறது. இந்தச் சேவை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு நிறுத்தப்படும் என்றும், இந்த நடவடிக்கை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும் ஏர் இந்தியா கூறியுள்ளது.
இந்தியாவின் முன்னணி பயணிகள் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்பு, இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
விமானங்களுக்கான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாலும், தொடர்ந்து நடக்கும் மோதல்கள் காரணமாகவும் பல சர்வதேச விமான நிறுவனங்களும் இஸ்ரேலுக்கான விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. சில இஸ்ரேலிய விமான நிறுவனங்களின் சேவைகள் மட்டுமே கடுமையான நிபந்தனைகளின் கீழ் தொடர்ந்து இயங்கி வருகிறது.