ISCON, ,மேனகா காந்தி
ISCON, ,மேனகா காந்தி ட்விட்டர்
இந்தியா

‘பசுக்களை விற்கிறார்கள்’.. பகீர் கிளப்பிய பாஜக எம்.பி. மேனகா காந்தி.. பாய்ந்த ISKCON அமைப்பு!

Prakash J

முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய பாஜக எம்பியுமான மேனகா காந்தி, அவ்வப்போது விலங்குகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இஸ்கான் (ISKCON) அமைப்புக்கு எதிராக அவர் பேசியிருப்பது வைரலாகி வருகிறது. இதையடுத்து, அவருடைய கருத்துக்கு இஸ்கான் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த வீடியோவில் மேனகா காந்தி, “இஸ்கான், நாட்டின் மிகப்பெரிய மோசடி நிறுவனம். கோசாலைகளை (பசுக்களுக்கான இடம்) பராமரிக்கும் இந்த நிறுவனம், பெரிய அளவிலான நிலங்கள் உட்பட அரசாங்கத்தின் பல்வேறு பலன்களைப் பெறுகிறது. ஆனால் பசுக்களை பராமரிக்காது, அவற்றை இறைச்சி கடைகளுக்கு அனுப்பி வருகிறது. நான் இஸ்கான் நிறுவனத்தின் ஆந்திராவில் உள்ள ஆனந்தபூர் கோசாலைக்கு சென்றேன். அங்கு பால் கொடுக்காத பசுக்களையோ, கன்றுகளையோ காண முடியவில்லை.

இதன்பொருள் என்னவென்றால், அவை அனைத்தும் விற்கப்பட்டுவிட்டன. இஸ்கான் தனது அனைத்து மாடுகளையும் இறைச்சி கடைக்காரர்களுக்கு விற்று வருகிறது. இதை அவர்கள் செய்யும் அளவுக்கு வேறு யாரும் செய்வதில்லை. 'ஹரே கிருஷ்ண ஹரே ராம' என்று சாலைகளில் அவர்கள் பாடிக்கொண்டு செல்கிறார்கள். அப்போது தங்களின் வாழ்நாள் முழுவதும் பாலை நம்பியிருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், அவர்களைப்போல கால்நடைகளை இறைச்சிக் கடைகளுக்கு அனுப்புவோர் இல்லை” எனக் கடுமையாகச் சாடியிருந்தார்.

மேனகா காந்தியின் கருத்துக்கு இஸ்கான் மறுப்பு!

மேனகா காந்தியின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இஸ்கான் அமைப்பு சார்பில் அதற்கு மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘இஸ்கான் கோசாலைகளில் பசுக்களும் காளைகளும் வாழ்நாள் முழுவதும் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. அவை கசாப்புக் கடைகளுக்கு விற்கப்படவில்லை. மேனகா காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை. அவர் சொல்லும் இஸ்கானின் அனந்த்பூர் கௌசாலாவில் பால் கொடுக்காத 246 பசுக்கள் உள்ளன. அவையும் பிற பசுக்களை போலவே பராமரிக்கப்படுகின்றன.

மாட்டிறைச்சி முக்கிய உணவாக இருக்கும் நாடுகளில்கூட, பசு பாதுகாப்பில் இஸ்கான் முன்னோடியாக உள்ளது. மேனகா காந்தி நன்கு அறியப்பட்ட விலங்கு உரிமை ஆர்வலர் மற்றும் இஸ்கானின் நலனில் அக்கறை கொண்டவர். எனவே, அவரது இந்த கருத்து ஆச்சரியம் அளிக்கிறது’ என இஸ்கான் சார்பில் அதன் தேசிய செய்தித் தொடர்பாளர் யுதிஷ்டர் கோவிந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

இஸ்கான் (ISKCON) என்பது என்ன?

இன்று உலகம் முழுவதும் புகழ்பெற்ற அமைப்பாக ISKCON (International society for Krishna Consciousness) மாறி உள்ளது. இஸ்கான் என்பது, கிருஷ்ணரின் பக்தியை உலகம் முழுவதும் கொண்டுசெல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகும். சர்வதேச கிருஷ்ண பக்தி கழகம் என்பது இதன் பொருளாகும். கெளடிய - வைஷ்ணவ சம்பிரதாய முறையை அடிப்படையாகக் கொண்டது இஸ்கான் அமைப்பு.

ஆந்திரா கிருஷ்ணன் கோயில்

கிருஷ்ண பக்தியை பரப்பிவரும் இஸ்கான் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இஸ்கான் வழிபாட்டு முறைகளை லட்சக்கணக்கான மக்கள் பின்பற்றுகின்றனர். இஸ்கான் அமைப்பு சார்பில் கோசாலைகள் அமைக்கப்பட்டு, பசுக்களுக்கு உணவளித்து பராமரிக்கப்பட்டு வருகிறது.