லேண்டர் விக்ரமின் புகைப்படம் என சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட தவறான புகைப்படங்கள் பரவ ஆரம்பித்துவிட்டன.
சந்திரயான்-2 திட்டத்தின் கடைசி நேரத்தில் லேண்டர் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டர் நிலவில் தரையிறங்குவதை காண இந்தியாவே காத்திருந்த நிலையில் அது நடக்காமல் போனது. இதனிடையே தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், இருக்கும் இடம் இன்று தெரியவந்திருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். நிலவின் மேற்பரப்பில் லேண்டர் இருப்பதை ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியுள்ளதாகக் கூறிய அவர் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் தகவல் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். லேண்டர் தொடர்பை பெற தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக லேண்டர் மற்றும் அது என்ன ஆனது..? என்பது குறித்து அறிந்துகொள்ள மக்கள் காத்திருக்கும் நிலையில், இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை மக்கள் நாடி வருகின்றனர். இந்த நேரத்தை பயன்படுத்தி, இதுதான் விக்ரம் லேண்டரின் புகைப்படம் என சமூக வலைத்தளங்களில் பலரும் பலவகையான புகைப்படத்தை இஷ்டத்திற்கு பகிர்ந்து வருகின்றனர். உண்மையில் தற்போது வரை இஸ்ரோவால் அதிகாரப்பூர்வமாக விக்ரம் லேண்டரின் படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் சில படங்கள், அமெரிக்காவின் நாசாவால் நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்பல்லோ 16 லேண்டர் தரை இறங்கிய மற்றும் ரோவர் கடந்து சென்ற பாதை ஆகியவை தான். அவை, நாசாவால் அனுப்பப்பட்ட நிலவை சுற்றி படம்பிடிக்கும் LRO விண்கலம் பிடித்த படங்கள் ஆகும்.
இன்னொரு விஷயம், இஸ்ரோவால் ஆர்ப்பிட்டர் மூலம் எடுக்கும் படங்கள் தெர்மல் இமேஜ் (வெப்பம் மற்றும் குளிர்) மாறுபாடு கொண்ட வண்ண புகைப்படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.