இந்தியா

எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் நிதிஷ்குமாரா? - சந்திரசேகர ராவ் பளிச் பதில்!

webteam

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசித்த பின் முடிவெடுக்கப்படும் என தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்நிலையில், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரை, தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசியுள்ளார்.

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் இருப்பாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது இந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டாம் என நிதிஷ்குமார் எழுந்தார். இருப்பினும் சந்திரசேகர் ராவ் அதற்கு எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசித்த பின் முடிவெடுக்கப்படும் என பதிலளித்தார். இதனால் நிதிஷ்குமாரை, சந்திரசேகர் ராவ் அவமதித்து விட்டதாக பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.