இந்தியா

பயணிகள் தகவல்களை விற்று ரூ.1000 கோடி திரட்ட திட்டம்? என்ன சொல்கிறது IRCTC?

webteam

பயணிகள் குறித்த தகவல் தொகுப்பை ஐஆர்சிடிசி வணிகரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தங்களிடம் உள்ள பயனர்களின் மின்னணு தகவல் தொகுப்பை (User data) வணிகரீதியாக அளித்து வருவாய் ஈட்டும் வழிகள் குறித்து ஆலோசனை அளிக்க அண்மையில் ஐஆர்சிடிசி ஒப்பந்தப் புள்ளி கோரியது.

பயணிகள் குறித்த தகவல் உள்பட ஐஆர்சிடிசி வசமுள்ள மின்னணு தகவல்களை பகிர்வதன் மூலம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான மசோதா நிறைவேறும் வரை இந்தப் பணி மேற்கொள்ளப்படாது என்று ஐஆர்சிடிசி தரப்பில் கூறப்படுகிறது.

எனினும், இதற்கான ஆலோசனை அளிக்க கோரப்பட்டுள்ள ஒப்பந்தப் புள்ளிக்கு வருகிற 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் கற்பனையானது, அடிப்படை ஆதாரமற்றது என ஐஆர்சிடிசி மறுத்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐஆர்சிடிசி உயரதிகாரி ஒருவர், டிக்கெட் விற்பனை, ஓய்வறை முன்பதிவு, தங்குமிட பதிவு, விமானம் மற்றும் பஸ் டிக்கெட் முன்பதிவு, உணவு விநியோக சேவை ஆகிய வர்த்தகங்களை மேம்படுத்தவே ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.