ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ காவல் வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து நேற்று காலை சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விமான நிலையத்தில் கைது செய்தனர். ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கார்த்தி ஒத்துழைக்கவில்லை எனக்கூறி, அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கார்த்தி சிதம்பரம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, கடந்த 2007இல் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தின் உதவியை நாடி, அதற்கு ரூ.10 லட்சம் பணம் கொடுத்ததாக ஐஎன்எக்ஸ் மீடியா உரிமையாளர் இந்திராணி முகர்ஜி ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு தெரிவித்தது. அத்துடன் ப.சிதம்பரத்திற்கு எதிராக இந்திராணி சாட்சியம் அளித்துள்ளதாக சிபிஐ தரப்பு தெரிவித்தது. பின்னர் கார்த்தி சிதம்பரத்தை 2 வாரம் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது. ஆனால் ஒரு நாள் மட்டும் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து ஒருநாள் காவல் முடிந்து இன்று மீண்டும் கார்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது மேலும் 5 நாட்கள் காவலில் விசாரிக்கு சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மார்ச் 6ஆம் தேதி வரை சிபிஐ கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தவுள்ளனர்.