இந்தியா

குதிரைபேரம்? - ராஜஸ்தானில் காங். எம்எல்ஏக்கள் தங்கியுள்ள இடத்தில் இணைய சேவை துண்டிப்பு

ஜா. ஜாக்சன் சிங்

மாநிலங்களவை தேர்தலில் குதிரைபேரம் எதிரொலியாக, ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசு விடுதியில் இணைய
சேவை நிறுத்தப்படுகிறது.

மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு நாடு முழுவதும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தலுக்கு முன்னதாக தங்களது கட்சி எம்எல்ஏக்கள் கட்சி மாறிவிடுவார்களோ என்ற அச்சத்தால், உதய்பூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு அவர்கள் அங்கிருந்து ஜெய்ப்பூர் அமர் பகுதியில் இருக்கும் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு காலை 9 மணி முதல் 12 மணி வரை இணைய சேவையை நிறுத்தி வைக்க ஆளும் காங்கிரஸ் அரசு உத்தரவிட்டது. ராஜஸ்தானில் 4 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ் சார்பில் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகிய மூன்று வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பாஜக சார்பில் முன்னாள் அமைச்சரான கன்ஷியாம் திவாரி போட்டியிடுகிறார். ஐந்தாவது வேட்பாளராக பாஜக ஆதரவுடன் பிரபல ஊடக உரிமையாளர் சுபாஷ் சந்திரா களத்தில் உள்ளார். இதனால் குதிரைபேரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸில் மூன்று பேர் வெற்றி பெற 123 வாக்குகள் தேவை என்ற நிலையில், அக்கட்சிக்கு 108 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பாஜகவுக்கு 71 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.