இந்தியா

 தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் - டெல்லியில் இணையதள சேவை துண்டிப்பு

Veeramani

டெல்லியில் போராட்டம் நடைபெறும் எல்லைப் பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரம் அடைவதை தடுக்கும் நோக்கத்தில் டெல்லியில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை விளக்கமளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மறு உத்தரவு வரும்வரை இன்டர்நெட் சேவை தற்காலிகமாக துண்டிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. போலிசெய்திகள் பரவுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டது

டெல்லி ஐடிஓ பகுதியில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் பங்குபெற்ற விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். டிராக்டர் பேரணியில் பங்கேற்றவர்களை கலைக்க முயன்றபோது விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நடைபெற்ற போலீஸ் தடியடியில் படுகாயமடைந்த விவசாயி நவ்நீத்( 45வயது) உயிரிழந்தார்.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுமார் இரண்டு மாதங்களாக டெல்லியில் போராட்டம் நீடித்து வருகின்றது. மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே நடந்த 12 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இன்று விவசாயிகள் மாபெரும் டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இன்று டெல்லியில் டிராக்டர்கள் மூலம் போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் , செங்கோட்டையை முற்றுகையிட்டனர்.