infosys x page
இந்தியா

மைசூரு | 400 பேரை பணிநீக்கம் செய்த இன்ஃபோசிஸ்.. காரணம் என்ன?

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், அதன் மைசூரு வளாகத்தில் பணியாற்றி வரும் சுமார் 400 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Prakash J

கொரோனா பொது முடக்கத்திற்குப் பின் உலகம் முழுவதும் பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. முன்னணி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களைக் காட்டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதில் முக்கியமாக ரோபா மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் பேசப்படுகிறது.

இந்த நிலையில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், அதன் மைசூரு வளாகத்தில் பணியாற்றி வரும் சுமார் 400 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரும் கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் பணியில் சேர்ந்தவர்கள் என்றும், ஒரு சில மாத பயிற்சிக் காலத்திலேயே இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்போது 700 பேர் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் நிறுவனத்தின் பயிற்சி முடிந்து, சில தொடர்ச்சியான உள்தேர்வுகளில், இவர்கள் தோல்வியடைந்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் கூறப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

infosys

இதுதொடர்பாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ள அறிக்கையில், “தேர்வில் தேர்ச்சி பெற விண்ணப்பதாரர்கள் மூன்று முறை முயற்சிப்பார்கள் என்றும், அதில் தோல்வியடைந்தால், அவர்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி நிறுவனத்தில் தொடர முடியாது. இது அவர்களின் ஒப்பந்தத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயல்முறை 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர திறமை கிடைப்பதை உறுதி செய்கிறது” எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் இன்ஃபோசிஸ் பங்குகள் 0.69 சதவீதம் குறைந்து ரூ.1,902.75 ஆக முடிவடைந்தன, இது முந்தைய சந்தை முடிவில் ரூ. 1,915.95 ஆக இருந்தது.