அந்தமானில் உள்ள வடக்கு சென்டினல் தீவுக்குள் நுழைந்த அமெரிக்கர் ஜான் ஆலன் ஜாவ் பூர்வகுடிகளால் கொல்லப்பட்டார். வேற்று மனிதர்கள் யாரும் சென்டினல் தீவுக்குள் நுழைந்துவிட்டு உயிரோடு திரும்ப முடியாதா? அங்கே இருக்கும் பூர்வகுடிகள் யார்? வெளியாட்களை அவர்கள் கொல்வது ஏன்? சென்டினல் தீவுக்குள் புதைந்து கிடக்கும் ரகசியங்கள் என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
அழகே உருவான அந்தமான் தீவு சிறைக்கும் சுற்றுலாவுக்கும் பெயர் போனது. யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமானில் பல சிறிய தீவுகள் உள்ளன. அதில் ஒன்றுதான் வடக்கு சென்டினல் தீவு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கிருப்பவர்களுக்கும் வெளியாட்களுக்கும் தொடர்பில்லை என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில் உண்மையும் அதுதான்.
சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சென்டினல் தீவு கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. சென்டினல் தீவுக்குள் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறியதால் அமெரிக்கர் ஜான் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றது சென்டினல் என்றழைக்கப்படும் பூர்வகுடிகள். இவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் தோன்றிய முதல் மனித இனத்தின் வழித்தோன்றல்கள் எனக் கூறப்படுகிறது. வடக்கு சென்டினல் தீவு மக்கள் நெக்ரிட்டோ என்னும் பூர்வகுடி வகையைச் சேர்ந்தவர்கள்.
தீவுக்குள் இருக்கும் காட்டுப்பன்றி, தேன், பழங்கள், மீன், தேங்காய் உள்ளிட்டவையே இவர்களின் உணவு. மரப்பட்டைகளைத்தான் ஆடைகளாக அணிகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் கற்காலத்தை ஒத்தவையாகவே இருக்கின்றன. இதன் மூலம் மனித நாகரிகத்தில் இவர்கள் எவ்வளவு பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை அறியலாம். சென்டினல் பூர்வகுடிகள் தங்கள் இடத்தை விட்டு வெளியே வரவும் மாட்டார்கள், தங்கள் இடத்திற்குள் வேறு யாரும் நுழைவதை அனுமதிக்கவும் மாட்டார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வெளி உலக தொடர்பே இன்றி வாழ்கின்றனர். வேற்று மனிதர் சென்டினல் தீவில் கால் வைத்தால் அவரது உயிருக்கு உத்தரவாதமில்லை.
சென்டினல் பூர்வகுடிகள் 350 அடி தொலைவுக்கு உட்பட்ட எந்தப் பொருள் மீதும் குறி தவறாமல் அம்பு எய்வதில் வல்லவர்கள். அந்தத் தீவில் சுமார் 150 பேர் வரை வசிக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தங்கள் இடத்திற்கு வருபவர்களை சென்டினல் தீவு பூர்வகுடிகள் கொலை செய்வது ஒன்றும் புதிதல்ல. 18 நூற்றாண்டிலேயே இதுபோன்ற தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. 2004ஆம் ஆண்டு சுனாமியின் போது தங்களை மீட்க வந்த அதிகாரிகளைக்கூட பூர்வகுடிகள் தாக்கினர்.
2006-ஆம் ஆண்டு வழிதவறி வந்த இரண்டு மீனவர்களை பூர்வகுடிகள் கொலை செய்தனர். மீனவர்களின் உடலை எடுக்கச் சென்ற கடலோர பாதுகாப்புப்படை ஹெலிகாப்டர்கள் மீதே அம்பு எய்திருக்கின்றனர் சென்டினல் பூர்வகுடிகள். அப்படி என்றால் வேற்று மனிதர்கள் யாரும் சென்டினல் தீவுக்குள் நுழைந்துவிட்டு உயிரோடு திரும்ப முடியாதா? அதுவும் ஒருமுறை நடந்திருக்கிறது.
1991ஆம் ஆண்டு பூர்வகுடிகளை சந்திக்க குழு ஒன்று பரிசுப் பொருள்களுடன் சென்றது. குழுவினர் வழங்கிய தேங்காய்களை மட்டும் சென்டினல் பூர்வகுடியினர் பெற்றுக்கொண்டனர். அந்தக் குழுவினரை பூர்வகுடிகள் எதுவும் செய்யவில்லை. ஆனால் அதன்பிறகு சென்டினல் தீவுக்குள் சென்ற யாரும் உயிருடன் திரும்பியதில்லை. பூர்வகுடிகள் நாகரிக வளர்ச்சி பெற்றவர்களை வேற்று மனிதர்களாகவே பார்க்கின்றனர். அவர்களின் வாழ்வியலை பற்றிய தகவல்கள் கூட முழுமையாக இல்லை. அறிவியலும் நாகரிகமும் அசுர வளர்ச்சி பெற்று விட்ட இந்தக்காலத்தில் சென்டினல் பூர்வகுடிகள் அதிசயமானவர்கள்தான்.