passengers stuck inside indigo plane  video screen shot
இந்தியா

சென்னை| இண்டிகோ விமானத்துக்குள் 5 மணி நேரம் தவித்த பயணிகள்! என்ன நடந்தது?

சென்னை-சிங்கப்பூர் இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 5 மணி நேரம் விமானத்திற்குள்ளேயே பயணிகள் சிக்கித்தவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது..

PT WEB

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் ஏசி பிரச்சினையால் 5 மணி நேரம் பயணிகள் தவித்தனர். விமானி மாற்றம் மற்றும் ஏசி சரிசெய்யப்பட்ட பின்பும், விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் விமானம் புறப்பட்டு சென்றது.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில், சுமார் 5 மணி நேரம் பயணிகள் பரிதவித்த சம்பவம் நடந்துள்ளது.

198 பயணிகளுடன் விமானம் புறப்பட தயாரானபோது, விமானத்திற்குள் ஏசி வேலை செய்யாமல், மிகுந்த வெப்பநிலை இருந்துள்ளது. இதையடுத்து விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன.

indigo flight

இச்சூழலில், தனது பணி முடிந்துவிட்டதாகவும், ஏசி பிரச்சினையை சரிசெய்துவிட்டு, வேறு விமானி வந்து விமானத்தை இயக்குவார் என்றும் கூறி, சம்பந்தப்பட்ட விமானி விமானத்தில் இருந்து கீழே இறங்கி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

பின்பு ஏசி பிரச்சினை சரிசெய்யப்பட்ட பின்பும் விமானத்தை இயக்குவதற்கு விமானி வராததால், பயணிகள் சுமார் 5 மணிநேரம் விமானத்துக்கு உள்ளேயே தவிக்கும் நிலை நேர்ந்தது. விமானத்தில் லேடர் பொருத்தப்படாததால், பயணிகளால் கீழேயும் இறங்க முடியவில்லை. இதையடுத்து பயணிகள் விமானத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விமானத்தில் இருந்த மூத்த குடிமக்கள் பலரும், நீண்ட நேரம் காத்திருந்ததால், உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாகி அவதிப்படும் நிலை ஏற்பட்டது.

பின்னர் விமானி வந்துசேர்ந்து, சுமார் 5 மணி நேர தாமதத்துக்கு பிறகு விமானம், சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.