இந்தியா

மாற்றுத்திறனாளி குழந்தைக்கு அனுமதி மறுத்த இண்டிகோ நிறுவனம்.. ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு!

ச. முத்துகிருஷ்ணன்

மாற்றுத்திறனாளி குழந்தைக்கு அனுமதி மறுத்த இண்டிகோ நிறுவனம்! ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் விமானத்தில் ஏற மாற்றுத்திறனாளி குழந்தைக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், இண்டிகோ நிறுவனத்திற்கு விமான போக்குவரத்துதுறை இயக்குநரகம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மே 7ஆம் தேதி ராஞ்சி விமான நிலையத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் தடுத்தனர்.

விமான நிலையத்திற்கு அசௌகரியமான காரில் பயணம் செய்ததால் மன அழுத்தத்திற்கு ஆளான குழந்தை சத்தமாக அழத் துவங்கியது. பெற்றோர் குழந்தையை சமாதானப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கும்போது குழந்தை 'சாதாரணமாக' செயல்படும் வரை குழந்தையை விமானத்தில் ஏற அனுமதிக்க மாட்டோம் என்று இண்டிகோ மேலாளர் குடும்பத்தினரை எச்சரித்தார். சிறப்புத் திறன் கொண்ட குழந்தை மற்ற பயணிகளுக்கு ஆபத்தானது என்றும் மேலாளர் கூறினார்.

பல சக பயணிகள் அவரது நடவடிக்கையை எதிர்த்த போதிலும், மேலாளர் அசையாமல் உறுதியாக இருந்தார். இதுதொடர்பான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில், பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதியளித்தார். இதையடுத்து இண்டிகோ நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ள விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம், மனிதாபிமானத்தோடு ஊழியர்கள் நடந்துகொள்ள கூடுதல் பயிற்சி அளிக்க அறிவுறுத்தியுள்ளது.